Monday, October 01, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபையின் மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன்போது கிழக்கு மாகாணசபையினை நடத்துவதற்கான மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவின் கடிதம் சபையின் செயலாளரினால் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபையின் தவிசாளர், உப தவிசளர் தெரிவுகள் இடம்பெற்றன.
இதன்போது சபையின் தவிசாளராக திருமதி ஆரியவதி கலப்பதியும் உப தவிசாளராக எஸ்.எம். சுபைர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
சபையின் புதிய தவிச்சாளராக தெரிவு செய்யப்பட்ட திருமதி ஆரியவதி கலப்பதி, கலைக்கப்பட்ட முதலாவது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் உப தவிசாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எஸ்.எம். சுபைர் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முதலாவது சபை அமர்வு 11.15 தொடக்கம் 11.30 மணிவரையில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்களின் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சபை அமர்வு ஆரம்பமானதுடன், நன்னியுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இதன்போது கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சி.தண்டாயுதபாணியும், துரைரட்ணசிங்கமும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், எம்.ஏ.ஜமீலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் நன்றி உரைகளை நிகழ்த்தினர்.

No comments:
Post a Comment