Friday, August 31, 2012

மாணவியுடன் ‘ஓடி பிடித்து’ விளையாடும் மலை பாம்பு!

Friday, August 31, 2012
கேம்பிரிட்ஜ்::இங்கிலாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன் வீட்டில் செல்லப் பிராணியாக மலைப் பாம்பை வளர்த்து வருகிறார். நாய், பூனையைவிட அது அன்பாக பழகுவதாக சொல்லி நெகிழ்கிறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் கவுன்டியில் உள்ள கைஹர்ன் நகரை சேர்ந்த தம்பதி பீட் , கிம். இவர்களது மகள் குளோ (16) தற்போதுதான் பள்ளிப் படிப்பு முடித்து விலங்குகள் வளர்ப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவரது வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுவது ‘லில்லி’ என்ற மலைப் பாம்பு. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் குளோவுக்கு பொழுதுபோக்கு லில்லிதான். எந்நேரமும் அவரது கழுத்தில் துண்டு போல லில்லி தவழும். தங்கள் செல்லப் பிராணி பற்றி குளோ கூறியதாவது: லில்லிக்கு 7 வயது ஆகிறது. ரொம்ப சாது. உண்மையிலேயே, எங்களது நாய், பூனைகளைவிட லில்லி சமர்த்து. எந்த வகையிலும் தொந்தரவு தராது. குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பாராமல் முதுகில் தவழ்ந்து விளையாடும். எங்களது 3 பெட்ரூம் வீட்டில்தான் அதுவும் வளர்கிறது. லில்லிக்காக பிரத்யேகமாக 10,க்கு 6 அடி சைஸில் கதகதப்பான கன்டெய்னர் செய்து வைத்துள்ளோம். அதில்தான் தூங்கும். தூக்கம் என்றால் லில்லிக்கு கொள்ளை ஆசை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கும். திடீர் திடீரென குட்டித் தூக்கம் போடும். 3 வாரத்துக்கு ஒருமுறை ஒரு முயல் தின்கிறது. சுள்ளென்று வெயில் அடிக்கும் நேரத்தில் தோட்டத்தின் புல் தரையில் புரள்வது லில்லிக்கு ரொம்ப இஷ்டம். தோட்டத்தில் எங்களுடன் ஓடிப் பிடித்து விளையாடும். அப்பா, அம்மா 25 ஆண்டுகளாக பாம்புகள் வளர்த்து வருகிறார்கள். இப்போது பாம்புக் கடை வைத்துள்ளார்கள். குட்டியாக இருக்கும்போது லில்லியை வாங்கினோம். இப்போது 7 வயது ஆகிறது. 17 அடி நீளம் உள்ளது. 20 அடி வரை வளரும் என்று நினைக்கிறோம். அனேகமாக, இங்கிலாந்திலேயே மிக நீளமான செல்லப் பிராணி இதுவாகத்தான் இருக்கும். பல்வேறு விலங்குகளை பாதுகாத்து வளர்க்கும் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் ஆகவேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment