Friday, August 31, 2012

கூடாங்குளம் அணுமின் நிலையம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!

Friday, August 31, 2012
இலங்கை::தென் இந்தியாவிலுள்ள கூடாங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்தியாவிடம் விசனம் தெரிவித்த இலங்கை, இரு தரப்புக்குமிடையில் உடனடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென கேட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக, புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அறிவித்ததாகவும் இரு நாட்டு அணுசக்தி ஆணைக்குழுகளின் பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்சினைப்பற்றி பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம டெய்லி மிரருக்கு கூறினார்.

இலங்கையின் மேற்கு கரையிலிருந்து 240 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த அணு நிலையத்தில் கதிர்வீச்சு ஒழுக்கு அல்லது வேறு விபத்து ஏற்படும் போது இலங்கைக்கு பெருங்கேடு விளையும் ஆபத்து உள்ளது என இலங்கை சூழலியலாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.

இது விடயத்தில் சர்வதேச அணுசக்தி அதிகாரசபையின் உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை இலங்கைக்கு உள்ளது என சூழலியலாளர் ஜகத் குணவர்த்தன கூறினார்.

திட்டமிடப்பட்டுள்ள இந்த அணு மின்நிலையம் கற்பிட்டியிலிருந்து 200 கிலோமீற்றர் மேற்கில் உள்ளது. எனவே ஒரு விபத்து ஏற்படும்போது உயர் ஆபத்து ஏற்படும். வீச்சுக்கள் இலங்கை வரமாட்டாது என இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்சித் விஜயவர்தன கூறினர்.

ஆயினும் இரண்டாம் மட்ட விளைவாக எமது வளிமண்டல, மழைநீர் என்பவற்றில் கதிர்வீச்சு கலக்கும் ஆபத்து உண்டென அவர் கூறினார்.

இங்கு இரண்டு அணு உலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயலளவு உள்ளவை. இவ்வாறு மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கும் திட்டமும் உள்ளது. இலங்கையின் வருடாந்த மின்தேவை 2000 மெகாவாட் மட்டுமே' என அவர் கூறினார்.

உலகில் இப்போது 450 அணு மின் நிலையங்கள் உள்ளன. செர்னோபில் அணு மின்நிலையத்தால் 1986 இலும் ஜப்பானின் புகுஷீமா நிலையத்தில் கடந்த வருடமும் அனர்த்தங்கள் ஏற்பட்டன.

எனவே அணு உலை விபத்துக்கள் சாத்தியம் குறைவாகவே உள்ளது. இன்னும் 30 வருடங்களில் அனல் மின்நிலையங்கள் செயற்படும் சாத்தியம் இல்லாது போகும். அப்போது நாமும் அணு சக்திக்கு மாற வேண்டியிருக்கும்' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment