Friday, August 31, 2012

அனுமதி ரத்து செய்யப்பட்டதால் லண்டன் பல்கலை.யில் இந்திய மாணவர்கள் தவிப்பு!

Friday, August 31, 2012
லண்டன்::இங்கிலாந்தில் லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் லைசன்சை அரசு ரத்து செய்து விட்டதால், இந்திய மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளில் இருந்து 2,600க்கும் அதிகமான மாணவர்கள் இந்த பல்கலைக்கழத்தில் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், 26 சதவீத மாணவர்களிடம் சரியான விசா இல்லை, பல்கலைகளில் நடத்தப்படும் ஆங்கில அறிவு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை என்று இங்கிலாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் லைசன்ஸ் நேற்று ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த மாணவர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், Ôமெட்ரோபாலிடன் பல்கலையில் படித்த வெளிநாட்டு மாணவர்கள், தகுதியுள்ள விசா வைத்திருந்தால் அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பை தொடர 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அல்லது அவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்Õ என்று தெரிவித்தனர். இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். மேலும், பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் மாணவர்களுக்கு எதிராகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து மாணவர் சங்கத்தினர், பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment