Friday, August 31, 2012

கருணாநிதி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு : முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்!

Friday, August 31, 2012
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் முழு ஆதரவுடன், ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். ஞாயிற்று கிழமைகளிலும் அலுவலக பணிகளை, அவர் செய்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதி முரசொலி நாளிதழில் கருணாநிதியின் கேள்வி பதில்கள் என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. அதில், கோத்தகிரியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 என்று புகைப்படத்துடன் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே என்ற கேள்வியும், அதற்கு கருணாநிதி அளித்த பதிலில் கோத்தகிரியில் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது பற்றி, கோடநாட்டில் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார் என்று அரசின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றினை செய்யலாமே? என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த செய்தியை வெளியிட்ட முரசொலி நாளிதழின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் முரசொலி செல்வம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment