Thursday, July 5, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி: ஜெயலலிதா எதிர்ப்பு!

Thursday, July 05, 2012
சென்னை::இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-

இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, வாய் மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இலங்கை இனப் போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment