Saturday, July 7, 2012

சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை ரூ.9.81 கோடியில் திட்டம் தொடக்கம்!

Saturday, July 07, 2012
சென்னை::சென்னை துறைமுகத்தில் ரூ.9.81 கோடியில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘கப்பல் போக்குவரத்து மேலாண்மை திட்டம்’ தொடக்க விழா இன்று காலை துறைமுகத்தில் நடந்தது. இந்த திட்டத்தை மத்திய போக்குவரத்து கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

அப்போது, ஜி.கே.வாசன் பேசுகையில், ‘இந்த புதிய திட்டத்தின் மூலம் சென்னை துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களையும், எல்லையிலேயே கண்காணிக்க முடியும். இதில் தானியங்கி கண்காணிப்பு கேமரா, ரேடார் மற்றும் கப்பல்களுடன் தகவல் பரிமாறும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு, கப்பல்கள் நிறுத்த இடங்கள் ஒதுக்குவது மற்றும் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான தகவல்களையும் எளிதில் பெறலாம்’’ என்றார்.

அதன்பின், ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சிங்களருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும், இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தாம்பரம் விமான படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது வருத்தத்துக்கு உரியது. இது ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் டெல்லியில் அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சிக்கும் முக்கியமான திட்டம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு 4ஏ என்ற மாற்று பாதையை ஆராய குழு நியமித்துள்ளது. குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு வாசன் கூறினார்.

சென்னை துறைமுக தலைவர் அதுல்ய மிஸ்ரா, கப்பல் துறை தலைவர் கேப்டன் சின்ஹா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment