Monday, June 11, 2012

தென்னாசிய மெய்வன்மைப் போட்டிக்குத் தயாராகும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள்!

Monday, June, 11, 2012
இலங்கை::குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்களான புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது மெய்வன்மைப் போட்டிக்கு குறிபார்த்துச் சுடும் போட்டிக்குக்கூட துப்பாக்கி ஏந்த மறுக்கின்றனர் என புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறீ கஜதீர தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது அமைச்சினூடாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள். குறிப்பாக விளையாட்டுத் துறையில் சாதிக்கக்கூடியவர்கள்.

கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவை மட்டுமன்றி குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்கள். இவர்களை விளையாட்டுத்துறையில் முன்னேற்றும் பொருட்டு எதிர்வரும் 19ஆம் திகதி, எமது அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இணைந்து இவர்களுக்கான தேர்வுகளை நடத்தவிருக்கின்றது.

இதில் தெரிவு செய்யப்படும் வீரர்கள், தென்னாசிய மெய்வன்மைப் போட்டிக்குத் தயாராகும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்காக குறிபார்த்துச் சுடும் போட்டியில் பங்கு பற்றுவதற்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் மறுக்கின்றனர். தாம் மீண்டும் விளையாட்டுக்காகக் கூட துப்பாக்கி ஏந்தமாட்டோம் என சொல்கின்றனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment