Thursday, June 28, 2012

ஜனாதிபதி தேர்தல்: நேருக்கு நேர் மோத பிரணாப் - சங்மா தயார்!

Thursday, June 28, 2012
சென்னை::ஜனாதிபதி தேர்தலில், நேருக்கு நேர் போட்டியிடும், பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் தத்தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்கின்றனர். பிரதமர் சோனியா உள்ளிட்டோர் கையெழுத்திட்ட மனு, பிரணாப் முகர்ஜிக்காக தயாராகிவிட்ட நிலையில், அ.தி.மு.க., - பிஜு ஜனதாதளம் - பா.ஜ., எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட வேட்பு மனு, சங்மாவுக்காக தயாராகியுள்ளது. எதிரெதிர் துருவங்களாக களத்தில் இறங்கும் இருவருமே, இன்று, பார்லிமென்டிற்கு வந்து, ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆதரவு திரட்டுவதில் தீவிரம்: ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள், தலைநகர் டில்லியில், ஜரூராக நடைபெறத் துவங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவரும், நிச்சயமாக வெற்றி பெறப்போகிறவர் என்ற எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவருமான பிரணாப் முகர்ஜி, தனது நிதியமைச்சர் பதவியை, ராஜினாமா செய்துள்ளார். எதிர்தரப்பில் உள்ள சங்மாவும், தனது முயற்சிகளில் சற்றும் சளைத்து விடாமல், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், ஏற்கனவே துவங்கி விட்டிருந்தாலும், பிரதான வேட்பாளர்களான பிரணாப்பும், சங்மாவும் எப்போது மனுத் தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பிரமாண்டம்: இந்நிலையில், இருதரப்புமே தங்களது வேட்பு மனுத்தாக்கல் வைபவத்தை, சாதாரணமாக வைத்து விடாமல், சற்றே முக்கியத்துவமும் பிரமாண்டமாகவும் செய்திட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இவர்கள் இருவருக்குமே, அவரவர் தரப்பு ஆதரவு எம்.பி.,க்கள் - எம்.எல். ஏ.,க்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

ஆதரவு கையெழுத்து: பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நான்கு பாகங்களாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என 100 பேர் கையெழுத்திட்டு, மொத்தம் 400 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இவரது வேட்பு மனுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், முலாயம் சிங், கருணாநிதி, ராம்விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும், மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி கையெழுத்திட்டு, தயார் நிலையில் உள்ளது. நேற்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகத்தில், இந்த மனுவின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்றன. அப்போது, பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற வகையில் ஞானதேசிகன் கையெழுத்திட்டார். மேலும் அழகிரி, கிருஷ்ணசாமி, விஸ்வநாதன் உள்ளிட்ட எம்.பி.,க்களும் கையெழுத்திட்டனர். தனது வேட்பு மனுவை பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கான பொறுப்பு அதிகாரியும், ராஜ்யசபா செயலருமான அக்னி கோத்ரியிடம் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்யும் வைபவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் ஆதரவு கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கவுள்ளார்.

உடன் நவீன் வருகை: ஆளும் கூட்டணி வேட்பாளர் பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான இன்றைக்கே எதிர்க்கூட்டணி வேட்பாளரான சங்மாவும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். காலை 11 மணி வாக்கில் பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதால், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்ற பிறகு, நண்பகல் 12 மணிக்குமேல் தனது வேட்பு மனுவை சங்மா தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெறுகின்றன. சங்மாவுடன், நவீன் பட்நாயக் வருகிறார். சங்மாவின் மனுவை முன்மொழிந்து நேற்று முன்தினம் நவீன் பட்நாயக் கையெழுத்திட்டார். சங்மாவை ஆதரிக்கும் முக்கிய கட்சிகளான பிஜு ஜனதாதளம், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இவரது வேட்பு மனுவை தயாரிக்கும் பணியில் உள்ளனர். இரு தினங்களுக்கு முன், கவுகாத்தியில் பிஜு ஜனதாதள எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் அவர்களது கையெழுத்துகள் பெறப்பட்டன. அ.தி.மு.க., சார்பில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகளை பெறும் பணி தம்பிதுரையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் அனைவரது கையெழுத்துகளையும் பெற்று, வேட்பு மனுவை தயார் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். பா.ஜ., சார்பில் கடைசி கட்டமாக அனைத்து கையெழுத்துகளும் பெற்று, இன்று காலை இறுதி வடிவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

35 பேர் மனு: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட இதுவரை 35 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இலியாஸ் என்பவரின் மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது. தவிர, மேட்டூரைச் சேர்ந்த டாக்டர் பத்மராஜன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கோவணம் தங்கவேலு ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். போதிய எண்ணிக்கையிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சான்றிதழை இருவருமே அளிக்கவில்லை. எனவே, இவர்களின் மனுக்கள் வரும் 2ம் தேதி அன்று வேட்பு மனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும் என, பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment