Thursday, June 21, 2012

முதல் டெஸ்ட் டியூப் பேபி பெற்ற இங்கிலாந்து பெண் மரணம்!

Thursday, June, 21, 2012
லண்டன்::உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை பெற்ற இங்கிலாந்து பெண் மரணமடைந்தார். இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் வசித்து வந்தவர் லெஸ்லி பிரவுன். இவருக்கும் ஜான் என்பவருக்கும் 1969,ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 9 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த சமயத்தில்தான், மருத்துவ விஞ்ஞானிகள் ராபர்ட் எட்வார்ட்ஸ் மற்றும் மகப்பேறு நிபுணர் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோர் செயற்கை கருவூட்டல் முறையை உருவாக்கி இருந்தனர். 1978,ல் ஓல்டுஹாம் மருத்துவமனையில் இரு ஆராய்ச்சியாளர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் லெஸ்லி பிரவுன் கருவுற்றார். செயற்கை முறையில் கருத்தரிப்பது சிசுவுக்கு நல்லதல்ல. குழந்தை ஊனத்துடன் பிறக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். அதை தவிடுபொடியாக்கும் வகையில், முழு ஆரோக்கியத்துடன் கொழுகொழுவென பெண் குழந்தை பிறந்தது. இது அப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இயற்கையாக குழந்தை பெற முடியாதவர்கள் டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெறலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. முதல் டெஸ்ட் டியூப் பேபிக்கு ‘லூயிஸ் பிரவுன்’ என்று பெயர் வைத்தார்கள். உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் பேபியை பெற்றவர் என்ற பெருமை லெஸ்லிக்கு கிடைத்தது. அதன்பிறகு நடேலியா என்ற இரண்டாவது குழந்தையையும் அவர் டெஸ்ட் டியூப் முறையிலேயே பெற்றார். 64 வயதான லெஸ்லிக்கு சமீபத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தது. லெஸ்லி மறைவுக்கு விஞ்ஞானிகள் ராபர்ட், பேட்ரிக் உருவாக்கிய உலகின் முதல் செயற்கை கருவூட்டல் மருத்துமனையான பவுர்ன் ஹால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இரு மகள்கள் மூலம் லெஸ்லிக்கு 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். லெஸ்லியின் கணவர் ஜான் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

No comments:

Post a Comment