Sunday, June 3, 2012

சம்பந்தன் கூற்று வாபஸ் பெறப்பட வேண்டும் ! அப்துல் மஜீத் மெளலவி!

Sunday 3rd of June 2012
இலங்கை::தமிழர்கள் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்ற தனது கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் வாபஸ் பெற வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார் .இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய திரு. சம்பந்தன் அவர்கள் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழர் தாயகத்தில் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக்கூற்று பேரினவாத சிந்தனையின் அடிப்படையிலான கருத்தாகவே நாம் காண்கிறோம்.

வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல முழு இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் தங்களது தாயக பூமிகளிலேயே வாழ்கிறார்கள் என்பதை சம்பந்தன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரினத்தின் தாயகம் என்பது அந்தப்பகுதியை அவர்கள் ஆட்சி செய்தது என்பதை மட்டும் வைத்து வரையறுக்க முடியாது. அவ்வாறு முடியுமாயின் எண்ணூறு வருடங்கள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளமையால் இந்தியாவில் வாழும் இந்துக்கள் முஸ்லிம்களின் தாயகமான இந்தியாவில் வாழ்கிறார்கள் என்ற கருத்தியலையும் ஏற்க வேண்டும். இதனை சம்பந்தன் ஏற்பாரா என கேட்கிறோம்.

3000 வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் பலாத்காரமாக குடியேறிய சிங்களவர்கள் இன்று முழு நாடும் தாகமென கூறுவது போன்றே தென்னிந்தியாவிலிருந்து வடக்கு கிழக்கில் குடியேறிய தமிழர்களின் பரம்பரையில் வந்த திரு . சம்பந்தன் அவர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என கூறுவதன் மூலம் முஸ்லிம் தாயகத்தை மறுப்பதாகவே தெரிகிறது .

இலங்கையை பொறுத்தவரை போர்த்துக்கீசரின் வருகையின் போது மன்னார் பகுதியில் முஸ்லிம் அரசர் ஒருவர் வாழ்ந்ததாகவும் அவர் இறுதிவரை போர்த்துக்கீசரை எதிர்த்து போராடி தனது தாயகத்துக்காக மடிந்தார் என்பதும் வரலாறு. அதே போன்று கண்டிய மன்னனின் பரம்பரையில் பிறந்து முஸ்லிமாகி கல்முனையை ஆண்ட முஸ்லிம் சிற்றரசனையும் நாம் வரலாற்றில் காண்கிறோம். இவை அனைத்துக்கும் அப்பால் இலங்கையே முதல் மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் இறங்கிய பூமி என்பதால் உலகளாவிய முஸ்லிம்களின் முதல் தாயகமாக இலங்கையே காணப்படுகிறது.

இவ்வாறான புராதன வரலாறுகள் தேவையில்லை என ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும் கூட ஒருவர் ஒரு தலைமுறைக்கு ஒரு பூமியில் வாழ்ந்தால் அது அவரது தாயகமாகவே கருதப்படும் என்பதுதான் இன்றைய உலகின் முடிவாகும். இந்த வகையில் வடக்கிலும் கிழக்கிலும் பல நூறு தலமுறை கண்ட முஸ்லிம்கள் அவர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அதுவெல்லாம் அவர்களது தாயக பூமியே தவிர தமிழர்களின் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழவில்லை என்பதை அடித்துச்சொல்கிறோம்.

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஒற்றுமையின் அவசியம் உணரப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் சம்பந்தன் அவர்களின் இக்கருத்து எம்மை கவலையுறச்செய்கிறது. ஆகவே அவர் தனது இக்கருத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என உலமா கட்சி வலியுறுத்துகிறது. என்றும் கூறியுள்ளார்.

-ஜூனைட்.எம்.பஹ்த்-

No comments:

Post a Comment