Wednesday,June,13,2012இலங்கை:: எந்த காரணத்துக்காகவும் தாம் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்
மிகிந்தலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்துடன் இணையப் போவதாக போலியான பிரசாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தை போல எதிர்கட்சியின் சில அரசியல்வாதிகளும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள அவர், தாம் எந்த காலத்திலும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்...
தனக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து நாட்டில் உள்ள சிறு பிள்ளைக் கூட அறியும் - சரத் பொன்சேக்கா!
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர கட்டளையிட்ட தளபதி என்ற வகையில் தனக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து நாட்டில் உள்ள சிறு பிள்ளைக் கூட அறியும் எனவும் அந்த அச்சுறுத்தல்கள் ஓரிரு வருடங்களில் இல்லாமல் போகாது எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
மிகிந்தலை விகாரைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர், நேற்று (12) ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே பொன்சேக்கா இதனை கூறியுள்ளார். அந்த காலத்தில் எனக்கு 500 பேர் கொண்ட பாதுகாப்பு அணியின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனக்கு நிகரான அச்சுறுத்தல்கள் இருக்கும் நபர்களுக்கு இன்னும் முன்னர் வழங்கப்பட்ட 500, 300 படையணியை கொண்ட பாதுகாப்பு தற்போதும் வழங்கப்படுகிறது. இதனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 15 பேரால் எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும். இவர்கள் மிகவும் அக்கறையுடன் பாதுகாப்பு வழங்கினாலும் எண்ணிக்கை போதாது என்பதை அவர்களும் உணர்வார்கள். பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு பயந்து ஒழிந்து கொண்டிருக்க மாட்டேன்.
ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது நான் சில விடயங்களை கூறியிருந்தேன். அவை நிபந்தனையல்ல. எனக்கு எவை, எவை தேவையென கூறியிருந்தேன். அவை இல்லாவிட்டால் என்னை விடுதலை செய்வதை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதில் ஒரு விடயம்தான் பாதுகாப்பு. அவர்கள் போதும் என கருதும் அளவிலான பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இது போதுமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
பொன்சேக்காவை விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பிலும் எந்த நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை என பொன்சேக்காவின் மனைவி அனோமா பொன்சேக்கா, அவரது கணவர் விடுதலையாவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் விடுதலையான பொன்சேக்கா தனக்கு எப்படியான விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்பதை தான் அறியவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில், விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இவை, இவை தனக்கு தேவையென கேட்டிருந்ததாக பொன்சேக்கா முதன் முதலாக தகவல் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment