Wednesday, May 30, 2012

சைக்கிள் ரேஸ் வீரர்களுடன் 1833 கி.மீ. ஓடிய அசத்தல் நாய்!

Wednesday,May,30,2012
சீனாவில் சமீபத்தில் நடந்த சைக்கிள் ரேஸில் ஏராளமான வீரர்களுடன் சேர்ந்து நாய் ஒன்றும் பங்கேற்று 1,833 கி.மீ. தூரம் ஓடியது.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை சைக்கிள் பயணப் போட்டி நடத்தப்பட்டது. பந்தயம் துவங்கும் முன்பு அப்பகுதியில் வாலாட்டியபடி நின்றிருந்தது சியாசோ என்ற நாய். சியாவோ யாங் என்ற வீரர் தன்னிடம் இருந்த பிஸ்கட், பிரட் ஆகியவற்றை போட்டுள்ளார். அதை சாப்பிட்ட நாய், அவர் பின்னாலேயே ஓடிவர தொடங்கியது. தங்கள் கூடவே நாய் வருவதை சில வீரர்கள் பார்த்தனர். சிறிது தூரம் வந்துவிட்டு, திரும்பி சென்றுவிடும் என்று நினைத்தார்கள். நாய் நிற்கவில்லை. மூச்சிரைக்க வெகு தூரம் ஓடி வருவதை பார்த்து பரிதாபப்பட்ட வீரர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் ஆங்காங்கே நின்று அதற்கு உணவு, தண்ணீர் அளித்தனர். அதை சாப்பிட்ட நாய் மேலும் உற்சாகமானது. அவர்களுடன் சேர்ந்து இலக்கை எட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து சைக்கிள் பந்தய வீரர் சியாவோ யாங் கூறுகையில், ‘சியாசோ எங்களுடன் தொடர்ந்து ஓடிவந்து இந்த சாதனையை படைத்துள்ளது. தினமும் 60 கி.மீ. தூரம் செல்வோம். 12 மலைகள் ஏறியிருக்கிறோம். 24 நாட்களாக எங்களை பிரியாமல் மொத்தம் 1,833 கி.மீ. தூரம் ஓடிவந்திருக்கிறது. சியாசோவை இனிமேல் என்னுடனே வைத்துக் கொள்வேன். அதன் ரசிகர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டது’ என்றார்.

No comments:

Post a Comment