Sunday, April 29, 2012

கொலை சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை உள்ளிட்ட இருவர் கைது!:-போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

Sunday, April 29, 2012
இலங்கை::கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும்
இந்திய பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம தேனிய பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வருகைத் தந்த இந்திய பிர​ஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக இதற்கு முன்னர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இவர் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

67 போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம் விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களால் சுமார் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த நாணயத் தாள்கள் நீர்கொழும்பு உட்பட மேலும் சில பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது...

புத்தர் சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஏழு பேர் கைது!

சூரியவெவ பகுதியில் இரண்டு புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்த ஏழு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த புத்தர் சிலைகள் 17 அங்குலம் மற்றும் எட்டு அங்குலம் உயரத்தை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, பட்டபொல, தனமல்வில, ஹிக்கடுவ மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவெவ பகுதியில் இன்று காலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment