Sunday, April 29, 2012

மதுரை சித்திரை திருவிழா களைகட்டுகிறது மீனாட்சிக்கு நாளை பட்டாபிஷேகம்!

Sunday, April 29, 2012
மதுரை::மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகமும், மே 2ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். நாளை அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணியில் இருந்து 7.56 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.
பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.
பின்னர், பல சாதி கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். மே 2ம் தேதி காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 3ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
வாராரு... வாராரு அழகர் வாராரு
தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த 20ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மே 2ம் தேதி மாலை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்படுகிறார்.
மே 5 நள்ளிரவு 12 மணிக்கு தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். மே 6 அதிகாலை 2.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். அதிகாலை 3 மணிக்கு கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார். மே 6 காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்கியது முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

No comments:

Post a Comment