Sunday, April 01, 2012இலங்கை::திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் முன்னாள் புலிகள் இயகத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயக்கத்திற்கும் சந்தேக நபர்களுக்கும்; இடையிலான தொடர்பை நாம் இன்னும் உறுதிப்படுத்தவுமில்லை. அதற்கான சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவும் இல்லை. விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன' என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்;.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குச்சவெளி, பெரியகுளம் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவரது சடலத்திற்கு அருகில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ. என எழுதப்பட்ட காகிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்திருந்தனர். இது பொலிஸ் விசாரணைகளை திசைதிருப்பவே என ஆரம்பத்தில் பொலிஸார் நம்பினர்.
மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், 15 – 20 வருடங்களாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார் எனவும் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இவர் மறைந்து வாழ்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவர் இராணுவ உளவாளியாக செயற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment