Thursday, April 12, 2012

புலிகள் அமைப்பு, ஒழிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: போர் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு பணியில் வேகம் இல்லை: சந்திரிகா குற்றச்சாட்டு!

Thursday, April 12, 2012
புதுடில்லி::புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை, இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிபர் ராஜபக்ஷே, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுப் பணிகளுக்காக, தற்போது செய்வதை விட, இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்'' என, இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா விமர்சித்துள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, சொந்த விஷயமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து, டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பு, ஒழிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டது, தற்போதைய இலங்கை அரசுக்கு, அங்குள்ள தமிழர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இதை வலியுறுத்தி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என, இந்த நாடுகள் கூறி வருகின்றன. இந்த வாய்ப்பை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேகம் இல்லை: போர் முடிவுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. இலங்கை தமிழர்களுக்கு இந்த கால கட்டத்தில் அதிகமான மறு வாழ்வுப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அந்த அளவுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே, வேறுபாடு உள்ளது. ஆனால், இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ளவில்லை. மறு வாழ்வுப் பணிகளை பொறுத்தவரை, இலங்கை அரசு, இன்னும் அதிகமான பணிகளைச் செய்திருக்க வேண்டும்.

கடும் பாதிப்பு: இலங்கை தமிழர்கள், தொடர்ந்து நடந்து வந்த போரால், கடந்த 30 ஆண்டுகளாக, கடுமையான பாதிப்பிற்கும், பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment