Tuesday, February 28, 2012

இலங்கை கடற்படையினர் பச்சை மீன்களை வாயில் திணித்து கொடுமைபடுத்தினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி!

Tuesday, February 28, 2012
ராமேஸ்வரம்::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் ரவி. இவரது விசை படகை கடந்த 2007ம் ஆண்டு இந்திய கடற்படையினர் வாடகைக்கு எடுத்து ரோந்து சென்றனர். இதனால் அந்த படகில் நேவி என்று எழுதப்பட்டு இருந்தது. வாடகை காலம் கடந்த 2008ம் ஆண்டு முடிந்ததும் நேவி என்ற எழுத்தை மீனவர்கள் அழிக்கவில்லை.

இந்நிலையில் அந்த படகில் முத்துமணி (வயது 25), ஆரோக்கியம் (40), சேகர் (40) ஆகிய 3 மீனவர்கள் கடந்த 11-ந்தேதி மல்லிபட்டினம் அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகில் “நேவி” என்று எழுதப்பட்டிருந்ததால் மீனவர்களுடன் படகை சிறைபிடித்து சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் சோதனை என்ற பெயரில் அடித்து உதைத்து வாயில் பச்சை மீனை திணித்து உள்ளனர். வாந்தி எடுத்தபோது மீனவர்களின் வாயில் மீன்களை திணித்து கொடுமைபடுத்தி உள்ளனர். பின்னர் 3 மீனவர்களையும் காங்கேசன் துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மறுநாள் இலங்கை கெயிட்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் நேற்று மதியம் 12.30 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினர் செய்த கொடுமை குறித்து மீனவர் ஆரோக்கியம் கூறியதாவது:-

நடுக்கடலில் எங்களை தாக்கி பச்சை மீன்களை வாயில் திணித்து துன்புறுத்தினர். எங்கள் படகில் நேவி என எழுதப்பட்டிருந்ததை பார்த்து உங்கள் கடற்படையால் எங்களை என்ன செய்ய முடியும் என ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர் என்று கண்ணீர்மல்க அவர் கூறினார்.

No comments:

Post a Comment