Wednesday, February 15, 2012

சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் தேர்வு.. அழகிரி 'ரெக்கமன்டேஷனுக்கு' மேலிடம் தடை?

Wednesday, February 15, 2012
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணலின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் தேர்வு வருகிற 17ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ள கட்சிக்காரர்களை நேர்காணலுக்கு அழைத்துள்ளது திமுக மேலிடம். திமுக தலைவர் கருணாநிதியே நேரடியாக வேட்பாளரைத் தேர்வு செய்யவுள்ளார்.

இதுதொடர்பாக கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், வேட்பாளர் நேர்காணலுக்கு வரும் விருப்ப மனு தாக்கல் செய்தோர், துணைக்கு எந்த ஆதரவாளரையும், வேறு யாருடைய சிபாரிசுடனும் வரக் கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார். இது மு.க.அழகிரிக்கு விதிக்கப்பட்ட மறைமுக தடை என்று கருதப்படுகிறது.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை யாருக்காவது டிக்கெட் தர வேண்டுமானால் பொதுவாக அழகிரியின் ஆலோசனை மற்றும் பரிந்துரையைத்தான் கட்சி மேலிடம் இதுவரை நாடி வந்தது. அழகிரியால் கூட ஆதிக்கம் செலுத்த முடியாத பகுதிகளில்தான் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போதைய சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வேட்பாளர் விஷயத்தில் அழகிரியை ஓரம் கட்ட திமுக மேலிடம் முயல்வதாக கூறப்படுகிறது.

இதனால் 'திருமங்கலம் இடைத் தேர்தல் புகழ்' அழகிரி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

இதற்கிடையே இதுவரை 41 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களில் முன்னணியில் இருப்பவர் ராசையா என்கிற ராஜா என்கிறார்கள். இவர் 1996ம் ஆண்டு அதிமுக வேட்பாளரான கருப்பசாமியிடம் வெறும் 600 ஓட்டுக்களில் தோல்வி அடைந்தார். அன்று முதல் தான் மரணம் அடையும் வரை சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து ஜெயித்து வந்தார் கருப்பசாமி என்பது நினைவிருக்கலாம். எனவே பழைய முகமாகப் பார்த்து களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.

இருப்பினும் ராஜா, அழகிரி ஆதரவாளர் கிடையாதாம். ஆனால் அழகிரி ஆதரவாளரான நெல்லையைச் சேர்ந்த ஜவஹர் சூர்யா என்பவரும் போட்டிக் களத்தில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது...

தி.மு.க. தலைவர் பதவி ஏற்க தயார்: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி!

மத்திய மந்திரி மு.க.அழகிரி நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா?

பதில்:- தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம்.

கே:- அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறங்கி உள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே?

ப:- தி.மு.க. மந்த நிலையில் இல்லை. வருகிற 17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம்.

கே:- தி.மு.க. தலைவர் பதவி கிடைத்தால் ஏற்பீர்களா?

ப:- கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்.

தி.மு.க.- தே.மு.தி.க. இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் சொல்லாமல் மு.க.அழகிரி அங்கிருந்து சென்று விட்டார்.

No comments:

Post a Comment