Thursday, February 23, 2012

யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது-கிழக்கு முதலமைச்சர்.சந்திரகாந்தன்!

Thursday, February 23, 2012
இலங்கை::தமிழரசுக்கட்சி இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தினை காட்டுகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்தலில் குதித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் நிதி கொடுக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கொரு முகம், அரசாங்கத்திற்கு ஒரு முகம் எனப்பல முகங்களை அவர்கள் காட்டுகிறார்கள்.

அந்தவகையில் பார்த்தால் தமிழரசுக்கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை இல்லை என்பது தெளிவாவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

துறைநீலாவணையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சித்தி விநாயகர் வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

பொறுப்புள்ள அரசியல் கட்சி ஒருவர் ஒரு கடிதம் எழுதினால் அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருக்கும், நான் சம்பந்தன் ஐயாவுக்கு எழுதிய கடிதத்துக்கு தம்பி பிள்ளையான் கடிதம் கிடைத்தது, எதிர்காலத்தில் இது குறித்து யோசிப்போம் என்றாவது ஒரு பதில் கடிதத்தினை எழுதியிருக்கலாம் அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்து தமிழரசுக்கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியல்ல என்பது தெரிகிறது.

இந்தியாவில் பிரதமருக்கு தாக்குதல் நடத்தியதும், (இந்தியாவுக்கு அடித்ததும்), புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்ததும் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குக் காரணம்.

இந்திய - இலங்கை ஒப்பந்த்தினை ஏற்றுக் கொண்டிருந்தால் சமஸ்டியைவிடவும் அதிகமான, எல்லோரும் கேட்கின்ற தமிழீழம் அளவிலான அரசாங்கமே கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அதனை தலைவர் பிரபாகரன் செய்யத் தவறிவிட்டார். ஒருகாலத்தில் ஏற்றுக்கொண்ட நான் நேசித்த தலைவராக பிரபாகரன் இருந்தாலும் அவர் விட்ட பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது, அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயம்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று சொல்வதில் நலன் சார்ந்த விடயங்களைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காது விட்டமை ஒரு சமூகத்தின் நலன் சார்ந்த விடயமாகவே இருந்தது. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு - தமிழரசுக்கட்சி செய்வது வெறும் கட்சி அரசியல்தான் அதில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஒன்றுமில்லை.

தமிழரசுக்கட்சி இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தினை காட்டுகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்தலில் குதித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் நிதி கொடுக்கிறார்கள் அதற்காக அவர்களுக்கொரு முகம், அரசாங்கத்திற்கு ஒரு முகம் எனப் பல முகங்களை அவர்கள் காட்டுகிறார்கள். அந்தவகையில் பார்த்தால் தமிழரசுக்கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை இல்லை.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நடைபெற்றால் முஸ்லிம்களின் தனி அலகை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள் அந்தப்பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பார்கள். அதனை விடவும் கிழக்கிலுளள் சிங்களவர்களுக்குரிய இருப்பு எப்படியிருக்கும் எனப் பல கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

No comments:

Post a Comment