Wednesday, February 29, 2012

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய இருவர் வவுனியாவில் கைது!:-மாணவிகளை கேலி செய்த பாடசாலை மாணவர்கள் 43பேர் கொழும்பில் கைது!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவந்த இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள தமிழர்களை வவுனியா முகாம் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு போலி முத்திரைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு ஆவணங்கள் தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டிலுள்ள தமிழர்களின் இருப்பை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் முயற்சியால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவிகளை கேலி செய்த பாடசாலை மாணவர்கள் 43பேர் கொழும்பில் கைது!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் கல்லூரிகளுக்கு முன்னால் நின்று மாணவிகளை பகிடிவதைக்குட்படுத்தும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த 43 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியதாவது,

”இன்று பிற்பகல் வேளையில், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் கல்லூரிகள் இரண்டுக்கு முன்னால் நின்றுள்ள பிரபல ஆண்கள் கல்லூரியொன்றைச் சேர்ந்த மாணவர் குழுவினர் மேற்படி மகளிர் கல்லூரி மாணவிகளை கேலி செய்துள்ளனர்.

அத்துடன், மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டனர் என்று பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இது விடயமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிஸார் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் 43பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்” என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

No comments:

Post a Comment