Tuesday, January 31, 2012

கூடங்குளம் விவகாரத்தில் போராட்ட குழு - இந்து முன்னணி நெல்லையில் பயங்கர மோதல்!

Tuesday, January 31, 2012
நெல்லை::கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து 4வது கட்ட பேச்சில் பங்கேற்க வந்த போராட்ட குழுவினருக்கும் இந்து முன்னணியினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்கள், செருப்புகளை வீசி தாக்கி கொண்டனர். இதனால் நெல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில நிபுணர் குழுவினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்க இருந்தனர். பேச்சுவார்த்தையில் கூடங்குளம் போராட்ட குழுவினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மத்திய நிபுணர் குழு தலைவர் முத்துநாயகம் தலைமையில் 12 பேர் இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் செல்வராஜிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்ட குழு பிரதிநிதிகள் வருகைக்காக காத்திருந்தனர். இதற்கிடையே மாநில இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார், நெல்லை மாவட்ட செயலாளர் உடையார் மற்றும் இந்து முன்னணியினர் கலெக்டரையும், மத்திய நிபுணர் குழுவையும் சந்தித்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்த போவதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தனர்.
அப்போது கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மாநில நிபுணர் குழுவை சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் மற்றும் வக்கீல் சிவசுப்பிரமணியன், முகிலன், நில்பிரட், ராதாபுரம் யூனியன் கவுன்சிலர் இனிதா மற்றும் சுந்தரி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென உடையார் உள்ளிட்டோர் போராட்ட குழுவினர் மீது பாய்ந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை கல்வீசி தாக்கினர். பதிலுக்கு போராட்ட குழுவை சேர்ந்த பெண்களும் இந்து முன்னணியினர் மீது செருப்புகளை வீசி கோஷமிட்டனர்.

இந்த திடீர் மோதலால் கலெக்டர் அலுவலக வளாகம் போராட்ட களமாக மாறியது. பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். கல்வீசி தாக்கியவர்களை கைது செய்தனர். அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்ட குழுவினர் கோஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் கடும் பதற்றம் நீடித்தது. நெல்லை கமிஷனர் கருணாசாகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், ÔÔஅரசுக்கு மதிப்பளித்து 4வது கட்ட பேச்சில் பங்கேற்க வந்தோம். எங்கள் மீது இந்து முன்னணியினர் கல்வீசி தாக்கினர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பேச்சில் பங்கேற்கவில்லை. கூடங்குளம் அணு உலையை எங்கள் உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்றார். இதற்கிடையில் இந்து முன்னணியினர் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment