Thursday, January 5, 2012

வீதியில் தூக்கம், வெட்டவெளியில் சமையல் கடலூர் மக்களின் சோகம் தொடர்கிறது!

Thursday,January 05, 2012
கடலூர்:தானே புயல் தாக்கி 7 நாட்கள் ஆகியும் கடலூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் தூங்கி, வெட்டவெளியில் சமைத்து சாப்பிடும் அவலநிலை தொடர்கிறது. கடந்த 30ம் தேதி, தானே புயல் கடலூரை சூறையாடியது. கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, புவனகிரி என மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் புயலின் கோர தாண்டவத்தால் உருக்குலைந்து போயுள்ளன. இன்று 7வது நாளாக அங்கு மின்தடை தொடர்கிறது. வீடுகளை இழந்த மக்கள் வீதியிலும், பொது இடங்களிலும் தூங்குகின்றனர். மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வீதிகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் ஆங்காங்கே மலை போல் குவிந்துள்ளன. குடிநீர் விநியோகம் நடைபெறும் பகுதிகளில், குடிநீர் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து சென்னையில் உள்ள நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் குழு சோதனை நடத்தி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தொண்டு நிறுவனங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணியில் பெரும் பங்கு வகிப்பது வழக்கம். ஆனால் தற்போதைய புயல் பாதிப்பில் தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கவில்லை. அதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. புயல் பாதித்த கிராமங்களில் சம்மந்தப்பட்ட பகுதி வருவாய் துறையினர் யாரும் வரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். நேற்று கடலூர் அருகே உள்ள ராமாபுரம், எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு கணக்கெடுப்பு பணிக்காக வருவாய் துறை அலுவலர்கள் சென்றனர். அவர்களை மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்விகள் கேட்டனர். இதையடுத்து பணியை மேற்கொள்ள முடியாமல் வருவாய் துறையினர் திரும்பினர்.

No comments:

Post a Comment