Tuesday, January 31, 2012

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் காவல் நீடிப்பு!

Tuesday, January 31, 2012
மண்டபம்::இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேரின் காவலை வரும் 13ம் தேதி வரை நீட்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மீனவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் என்பவரது விசைப்படகில் மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெத், பிரசாத் ஆகியோர் 2011 நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அன்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துச் சென்றனர். போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சிமடம் மீனவர்களை அங்குள்ள கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களது காவலை பிப்ரவரி 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். தங்கச்சிமடம் மீனவர்களுக்கு 4வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 65 நாட்களாக இலங்கை சிறையில் வாடும் தங்கச்சிமடம் மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர் நலச்சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment