
Tuesday, January 31, 2012இலங்கை::இலங்கை மத்திய வங்கியின் மீது புலிகள் இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் மத்திய வங்கியில் விசேட நினைவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி புலிகள் இயக்க கரும்புலி போராளி ஒருவர் இலங்கை மத்திய வங்கியில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டார்.
இந்த குண்டுத் தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதோடு 400ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கொழும்பு - ஜம்பட்டா வீதியிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற மணல் லொறி ஒன்றில் பயணித்த கரும்புலி போராளிகள் இலங்கை மத்திய வங்கியை அண்மித்த போது தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்நிலையில் புலிகள் இயக்க தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிலருக்கு மத்திய வங்கி தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் புலிகளின் தேசிய தலைவர் உள்ளிட்ட சிலருக்கு 200 வருடங்கள் சிறைதண்டனை விதித்து அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அபயபிட்டிய தீர்ப்பளித்தார்.
புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான மத்திய வங்கி கட்டடத்தின் சில பகுதிகளில் இன்றும் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
No comments:
Post a Comment