Friday, December 2, 2011

இந்திய தூதரகம் எச்சரிக்கை : பணம் அனுப்பி ஏமாறாதீர்கள் சீனாவில் போலி கம்பெனிகள்!

Friday, December 02, 2011
பீஜிங் : சீனாவில் போலி கம்பெனிகள் அதிகரித்துள்ளன. வர்த்தக ரீதியாக சீன கம்பெனிகளுடன் பண பரிமாற்றம் செய்யும் போது இந்திய வர்த்தகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பீஜிங்கில் உள்ள இந்திய வர்த்தக கவுன்சில் ஆலோசகர் கே.நாகராஜ் நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சீனா - இந்தியா இடையே லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. தாராளமயமாக்க சூழ்நிலையை சீனாவில் அங்கீகாரம் பெறாத சிலர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இந்திய கிராமப்புற வர்த்தகர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது. இன்டர்நெட் மூலம் சீனாவில் இருந்து இந்திய வர்த்தகர்கள் பலர் பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். பண பரிமாற்றமும் இன்டர்நெட் மூலமே நடக்கிறது. இந்திய வர்த்தகர்கள் அனுப்பும் பணத்தை போலி கம்பெனி பெயரில் பெற்றுக் கொண்ட பின் சீன வர்த்தகர்கள் தலைமறைவாகி விடுகின்றனர்.

மோசடி தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் இந்திய தூதரகத்துக்கு 66 புகார்கள் வந்துள்ளன. வர்த்தகம் தொடர்பாக கணிசமான முன்பணம் பெற்ற பின் எந்த தகவலும் இல்லை என்று சீன கம்பெனிகள் மீது இந்தியாவில் இருந்து பலர் புகார் அனுப்பி உள்ளனர். அவர்கள் தெரிவித்த முகவரிகளில் விசாரித்த போது அவை போலி முகவரி என்று தெரிய வருகிறது. எனவே, சீன கம்பெனிகளிடம் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பும் இந்தியர்கள் ஒரு முறைக்கு இரு முறை நன்கு விசாரித்து பண பரிமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாகராஜ் நாயுடு எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment