Wednesday, December 28, 2011

சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்- நட்சத்திர ஓட்டல்களுக்கு 25 கட்டுப்பாடுகள்:போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!

Wednesday,December,28,2011
சென்னை:புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. மது விருந்து.. அழகிகளின் உற்சாக நடனம்... என ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் களை கட்டும்

இந்த ஆண்டும் இதற்காக நட்சத்திர ஓட்டல்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆடம்பர மாற்றங்களை கண்டுள்ளன. கிழக்கு கடற்கரை பண்ணை வீடுகள், நகரின் மையப் பகுதியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டல்கள் என சென்னையில் சுமார் 100 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடை பெற உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் நடனத்தை ரசித்துக் கொண்டே மது விருந்தில் பங்கேற்க அதிக பட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜோடியுடன் சென்றால் அதற்கு தனி கட்டணம் தனியாக சென்றால் வேறு கட்டணம். இப்படி விதவிதமான கட்டண பேக்கேஜ்களுடன் காத்திருக்கின்றன. நட்சத்திர ஓட்டல்கள். ஒரு சில ஓட்டல்களில் ஜோடிகளின் நடனத்தை பார்ப்பதற்கு தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோடிகளின் நடனம் நடக்கும் இடத்தை சுற்றி வட்ட வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஜோடி இல்லாமல் தனியாக செல்பவர்கள் மது அருந்திக் கொண்டே ஆட்டத்தை மட்டும் ரசிக்கலாம். இவர்கள் ஜோடிகளின் கூட்டத்தில் புகுந்து விடாமல் இருக்க பலம் வாய்ந்த பாதுகாவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். டூ பீஸ் உடையுடன் நடனம் ஆடுவதற்காக வெளிநாட்டு அழகிகளையும் ஒரு சில நட்சத்திர ஓட்டல்கள் புக் செய்துள்ளன. இவர்கள் டூ பீஸ் உடை அணிந்தபடி ஒரு சால்வையை போர்த்திக் கொண்டு வருவார்கள். திடீரென சால்வையை விலக்கி விட்டு 5 நிமிடம் மட்டும் அசத்தலாக ஆட்டம் போடுவார்கள். இதற்காக இவர்களுக்கு பல லட்சங்கள் வாரி இறைக்கப்படுகிறது.

இதே போல கிழக்கு கடற்கரைசாலை பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுப் பொலிவு பெற்றுள்ளன. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவேரா ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்தின்மேலே அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து பலர் உயிரிழந்தனர். இதன் பிறகு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இது தொடர்பாக 25 கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். முக்கிய கட்டுப்பாடுகள் வருமாறு:- விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக் கூடாது. நள்ளிரவு 1 மணிக்குள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு ஓட்டலில் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டல்களுக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளைஞர்கள் யாராவது சில்மிஷத்தில் ஈடுபட்டால் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும். ஓட்டலில் உள்ள பாது காவலர்கள் இவர்களை கண்காணிக்க வேண்டும்.

போதையில் தள்ளாடுபவர்கள் மது விருந்து முடிந்த பின்னர் போதையில் தள்ளாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. மது போதையில் இருப்பவர்களை வீடு வரை கொண்டு விட டிரைவர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். இதனை மீறி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

இது போன்ற கட்டுப்பாடுகளை ஓட்டல் நிர்வா கத்தினர் ஏற்றுக் கொண் டுள்ளனர். சென்னையில் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சென்னை போலீசார் செய்து வருகிறார்கள். கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், சஞ்சய் அரோரா ஆகியோரது மேற்பார்வையில், இணை கமிஷனர்கள், சண்முகராஜேஸ்வரன், சேஷசாயி, செந்தாமரைக் கண்ணன், சங்கர் ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டிசம்பர் 31-ந்தேதி அன்று இரவில் இருந்து விடிய விடிய சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment