Saturday, December 31, 2011

முல்லை பெரியாறு விவகாரம் கோவையில் லாரிகள் ஸ்டிரைக் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு!

Saturday,December,31,2011
கோவை::முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். நதிகளை தேசியமயமாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சரக்கு வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒருநாள் வாகன நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் கோவை லாரி உரிமையாளர் சங்கம், கோவை சரக்கு போக்குவரத்து சங்கம், மாநகர லாரி புக்கிங் ஏஜென்ட்ஸ் சங்கம், கோவை பேக்கர்ஸ், மூவர்ஸ் சங்கம், கோவை எல்சிவி ஆபரேட்டர்ஸ் சங்கம், கோவை மாவட்ட லாரி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம், கோவை தினசரி பார்சல் புக்கிங் சங்கம், கோவை இலகு ரக வாகன உரிமையாளர் சங்கம் ஆகியன பங்கேற்றுள்ளன. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் சரக்கு லாரிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் இன்று காலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வார கடைசி நாட்களில் காய்கறிகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படும். இந்த லாரிகள் ஏதும் செல்லவில்லை என்று மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறினார். இதனால் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் டி.கே. மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது பாதிக்கப்பட்டது. ஒரு நாள் ஸ்டிரைக் காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தக இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment