Monday, November 7, 2011

புலிகளுடனான போருக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கவில்லை-பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ச!

Monday, November 07, 2011
புலிகளுடனான போருக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ச தெரிவித்தார்.

நோர்வேயின் நடுநிலையான போர்நிறுத்த உடன்பாட்டையும் போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐ.தே.க. தலைவர், இராணுவ மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்­ச அரசாங்கம் புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொது மக்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த கருத்து தொடர்பாக பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போரு க்கு பிந்திய அபிவிருத்தி திட்டங்கள், விருத்தியடைந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகள், தீவிரவாத தாக்குதல் அச்சமின்றி வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் கண்களுக்கு தெரியவில்லை.

பிரதான எதிர்க்கட்சியாக ஐ.தே.க இருந்தாலும் போருக்கு ஆதரவு வழங்கவில்லை. இராணுவ வழிமுறையின் மூலம் புலிகளை மண்டியிடச் செய்ய முடியும் என்று ஐ.தே.க. நம்பவில்லை.

நான்காவது கட்ட ஈழப் போர் நடந்த காலத்திலோ அல்லது போருக்கு பின்னரோ இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐ.தே.கவினாலோ அல்லது அவராலோ வெளியிடப்பட்ட எந்தவொரு அறிக்கையாவது ரணில் விக்கிரமசிங்கவினால் காட்ட முடியுமா?

தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் பொறுப்புக் கூறும் விவகா ரம் தொடர்பாக ஐ.தே.கவின் நிலைப் பாட்டை வெளி ப் படுத்த முடியுமா?

ஐ.தே.கவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தமது மரபுவழி போர்ப்பலத்தை அதிகரித்துக் கொண்ட விபரங்கள் வெளியாகிவிடும் என்று ரணில் விக்கிரமசிங்க அச்சம் கொண்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கப்பல் கப்பலாக புலிகள் ஆயுதங்களையும், வெடி பொருட்களையும், கருவிகளையும் கொண்டு வந்து இறக்கிய போது ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆலோசகர்களும் எங்கே போயினர்? இராணுவ விவகாரங்களில் ஐ.தே.கவின் வழிகாட்டல் போன்று முட்டாள்தனமாக நாம் இருக்கமுடியாது.

நந்திக் கடலோரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை முடித்துவிட்டோம். 12 ஆயிரம் புலிகளை கைது செய்தோம்.பெருந் தொகையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், கருவிகளைக் கைப்பற்றினோம்.

பிரபாகரனுக்கு பின்னர் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனைக் கைது செய்து புலிகளின் ஒரு கப்பலையும் கைப்பற்றியுள்ளோம். நாம் இவற்றையெல்லாம் சாதித்துள்ள நிலையிலும் அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புலிகளின் பின்னால் நிற்கின்றது.

போருக்கு ஆதரவளிக்காத ரணில் விக்கிரமசிங்கவும், அவரது கட்சியும் எப்போதும் எமது முயற்சிகளைக் குறைத்தே மதிப்பிடுகின்றனர். கேலி செய்கின்றனர். 1990ல் இரண்டாவது ஈழப் போர் தொடங்குவதற்கு முன்னர் ஐ.தே.க நிர்வாகத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிதி குறித்து அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புலிகளின் வானொலிக்கான கருவிகளுக்கு செலுத்தப்பட்ட சுங்கத் தீர்வை உள்ளிட்ட சில பரிமற்றங்கள் குறித்த ஆவண சாட்சியங்கள் அரசாங்கத்திடம் உள்ளன.

போரின் போது நடந்து கொண்ட விதம் காரணமாக பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறும் உரிமையை ஐ.தே.க. இழந்து விட்டது என்றும் கோத்தபாய ராஜபக்ச­ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment