Friday, November 4, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை!

Friday, November 04, 2011
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

அறிக்கையை தொகுத்தமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நல்லிணக்க அணைக்குழுவின் ஊடக ஆலோசகர் கூறினார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் எழுத்து மூல மற்றும் வாய்மூல சாட்சியங்களை ஆணைக்குழு ஏற்கனவே பதிவு செய்திருந்தது.

அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முதல் யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் வரையான சாட்சிகளை விசாரிக்கும் நோக்கில் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவளை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா எதிர்பார்ப்புடன் இருப்பதாக இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர், விக்டோரியா நியூலன்ட் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையானது உயர் தரத்துடன் அமைய வேண்டும் என்பதுடன் அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment