Thursday, November 10, 2011தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது. கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எவ்விதமான அநீதியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது எனவும் அமைச்சர் கூறினார்.
கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது அரசாங்கத்துடனான பேச்சுக்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் எந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு வந்தாலும் இறுதியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கே வரவேண்டும். இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment