Friday, November 18, 2011தமிழ் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்தி வாழ்வாதாரம், விடிவு அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எமது மக்கள் இன்று உணரத் தொடங்கி விட்டார்கள்.
எனவே அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் ஜனாதிபதி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என அவரது பிறந்த நாளான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்பார்த்ததையும் விட கூடுதல் சேவைகளை செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ஏனெனில் அவருடைய காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு விடிவு உள்ளது. சகல விதத்திலும் விடிவு அவரால் தான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.
ஜனாதிபதி அவர்களின் பிறந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிறந்த நாளாக அமையவுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு பிறந்த நாளாகத்தான் நான் இதனைப்பார்க்கிறேன். ஏனெனில் யுத்தத்தை முடித்து ஜனாதிபதி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தாரோ இன்று அவ்வளவும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் மக்களுக்கு இது விளங்கவில்லை. வீதி அபிவிருத்தி, நாட்டின் அபிவிருத்தி என ஆரம்பத்தில் ஜனாதிபதி வாக்குறுதியளிக்கும் போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரும் போது இவ்வாறான வாக்குறுதிகள் வழங்குவது இயற்கை தானே என மக்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கு மக்கள் கூட இதனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
ஆனால் இன்று அதன் தாத்பரியத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் தான் பாதை அபிவிருத்தி, பாலங்கள் கட்டுமானங்கள் என்பது நடந்தேறியிருக்கிறது. மக்கள் இதனை உணர்கிறார்கள். அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்தாண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பயணமாக ஆரம்பித்த ஜனாதிபதி அவர்களின் இவ்வாண்டின் பிறந்தநாளுடன் ஜனாதிபதியாக இரண்டாவதாக பதவியேற்று அதன் முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் அவரது பயணத்தில் அபிவிருத்தியுடன் இன நல்லுறவையும், கட்டியெழுப்பும் இலக்கு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீல. சு. க. உப தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
No comments:
Post a Comment