Sunday, October 2, 2011

143-வது பிறந்த நாள்: காந்தி சிலைக்கு கவர்னர் ரோசய்யா-ஜெயலலிதா மாலை; மெரீனா கடற்கரையில் கோலாகலம்!

Sunday, October 02, 2011
சென்னை:அண்ணல் காந்தியடிகளின் 143-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 8.55 மணிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வந்தார். அவரை அமைச்சர் செந்தமிழன், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

9 மணிக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருவரும் காந்தி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காந்தி சிலை அருகே ராணிமேரி கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பிரமீடு ஆன்மீக மன்றம், பள்ளி மாணவ-மாணவிகள் தேசபக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். சிலர் ராட்டைகளில் நூல் நூற்றுக் கொண்டிருந்தனர். முதல்-அமைச்சரும், கவர்னரும் சிறிது நேரம் நூல் நூற்பதையும் தேசபக்தி பாடல்களையும் ரசித்தனர்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் பி.வி.ரமணா, சின்னையா, கோகுல இந்திரா, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா, எம்.எல்.ஏ.க்கள் வளர்மதி, கலைராஜன், வெற்றிவேல், மாதவரம் மூர்த்தி, அசோக், ராஜலட்சுமி, சமூகநல வாரிய தலைவி சி.ஆர்.சரஸ்வதி, சென்னை மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, நடிகை குமாரிசச்சு, தென்சென்னை மாவட்ட அவைத்தலைவர் கோதண்டராமர், தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ. அர்ஜுனன், ஆர்.டி.சாம்சன், கவுன்சிலர் வேட்பாளர்கள் விஜயராமகிருஷ்ணா, ஏ.இ. வெங்கடேசன், அமீர்பாஷா, பேரவை பகுதி பொருளாளர் டி.ஈஸ்வரன், மயிலை ராஜேஷ்கண்ணா, கவிஞர் வீரைகறீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு, உலக அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காந்தி சிலை முன்பிருந்து கிண்டி காந்தி மண்டபம் வரை சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியை அமைச்சர் செந்தமிழன் தொடங்கி வைத்தார். பேரணியில் தியாகிகள், பிரம்மகுமாரி அமைப்பை சேர்ந்தவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், யசோதா, நிர்வாகிகள் தாமோதரன், சேம.நாராயணன, 118-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், ஜமுனாகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் மாலை அணிவித்தார். பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பிரபு, திருநாவுக்கரசு கலந்து கொண்டனர். சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment