Tuesday, October 11, 2011

ராஜிவ் கொலையாளிகள் மீதான வழக்கை மாற்றுவதை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்!

Tuesday, October 11, 2011
புதுடில்லி:ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை, சென்னை ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுவதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாங்களின் கருணை மனு, 11 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில், வெங்கட் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை, சென்னை ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை, மிதமிஞ்சிய அளவில் இருப்பதால், இந்த வழக்கு நேர்மையாக நடக்காது. எனவே, சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நந்தகுமார் கூறியதாவது:கடந்த ஆகஸ்ட் 30ல், இந்த வழக்கு குறித்த விசாரணை, சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது, கோர்ட் வளாகத்திற்குள் 5,000 பேர் திரண்டிருந்தனர். இதனால், விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டது. தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும், அங்கு கூடியிருந்தவர்கள் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில்,
சென்னை ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு இதை மாற்ற வேண்டும்.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணா குமார் கூறுகையில், "இந்த வழக்கு விசாரணையை, சென்னை ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை மிதமிஞ்சிய அளவில் இருப்பதாகக் கூறுவது தவறு. மேலும், இந்த வழக்கை மாற்றும்படி கோருவதற்கு, மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை' என்றார்.

No comments:

Post a Comment