Sunday, October 23, 2011

புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சர்வதேசம் கூறிகொண்டிருந்த வேளையில்தான் நாம் புலிகளை தோற்கடித்தோம்-பைசர் முஸ்தபா!

Sunday, October 23, 2011
பொருளாதார நிபுணர்கள் அரசின் யுத்த வெற்றியை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொண்டு பொருளாதாரத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சர்வதேசம் கூறிகொண்டிருந்த வேளையில்தான் நாம் புலிகளை தோற்கடித்தோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளைத் தோற்கடிப்பதற்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். அவர்கள் இருவரும் கூட்டாக இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றியடைந்தனர்.

முடியாமை என்று ஒன்றுமில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ஜனாதிபதி முதலில் அவர் மீது நம்பிக்கை வைத்தார். பிறகு கோட்டாபே ராஜபக்ஷ முப்படையினர் மற்றும் நாட்டு மக்கள் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்தார். இறுதியில் வெற்றியடைந்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சுற்றுலாத் துறையைப் பாதுகாக்க நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தோம் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் துறையில் நேரடி வேலை வாய்ப்பைப் பெற்றிருந்த சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களையும் மறைமுகமாக வருமானத்தைப் பெற்றுக்கொண்டிருந்த அதிகமானோரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

எமது சர்வதேச விமான நிலையத்தின் மீதும் மக்களின் இலக்குகளின் மீதும் குண்டுகளைப் போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் நாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொண்டிருந்தோம்.

ஒரு சுற்றுலாப் பயணிக்கு அவர் செல்லும் இடத்தின் பாதுகாப்பு மிக முக்கியம். இதன் அடிப்படையில் ஊடகங்கள் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடா என்ற கேள்வியை எழுப்பின. பயங்கரவாதம் என்பது உலகம் பூராகவும் வியாபித்திருக்கும் ஒன்று. இலங்கை அதன் சிறிய பங்கைக் கொண்டுள்ளது என்று நாம் பதிலளித்தோம்.

அத்தோடு நின்று விடாது இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளின் மீது எமது கவனத்தைச் செலுத்தி அந்நாடுகளில் எமது சுற்றுலாத்துறையை மேம்படுத்தினோம். அவற்றில் நாம் வெற்றி கண்டோம். இன்றும் கூட அந்த நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment