Wednesday, October 12, 2011

காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா கடும் மறுப்பு!

Wednesday, October 12, 2011
நியூயார்க்: "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை. காஷ்மீர் மக்களின் கருத்தறியும் வகையில் ஐ.நா., தலைமையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என ஐ.நா., சபை விவாதத்தில் பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா., பொதுச் சபையில் நேற்று முன்தினம் காலனி நீக்கக் கமிட்டியில் பொது விவாதம் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதிநிதி தாகிர் உசேன் அந்த்ராபி கூறுகையில்,"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை. அப்படி எப்போதுமே அது இருந்தது கிடையாது' என்றார்.

ஐ.நா.,வுக்கான பாகிஸ்தானின் துணைத் தூதர் ரசா பஷீர் தரார் கூறியதாவது:காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல், ஐ.நா.,வின் காலனி நீக்கம் என்ற நோக்கம் முற்றுப் பெறாது. காஷ்மீர் மக்கள் தங்கள் இறையாண்மையைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானங்கள், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளன. சுமுகமான வழியில், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.தங்கள் இறையாண்மையைத் தீர்மானிக்கும் மக்களின் உரிமை புறக்கணிக்கப்படும் போது, அது பாதுகாப்புக்கு குந்தகமாகிறது. அதனால் காஷ்மீரில் ஐ.நா., தலைமையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு தரார் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதிநிதிகளின் இப்பேச்சுகளுக்கு இந்தியா தரப்பில் கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரா இதுகுறித்துக் கூறியதாவது: கமிட்டியின் பணிக்கும், காஷ்மீர் விவகாரத்திற்கும் தொடர்பில்லை. பாகிஸ்தானின் இந்த விவாதம் இப்போது தேவையற்றது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். மக்களின் உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உறுதியளித்துள்ளது. காஷ்மீர் மக்கள் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம், தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு ரவீந்திரா தெரிவித்தார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில், ஐ.நா., தலைமையிலான பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment