Monday, October 31, 2011

சிரியாவில் தலையிட்டால் பூகம்பத்தை சந்திக்க நேரிடும் : சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்!.

Monday, October 31, 2011
எங்கள் நாட்டில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் பூகம்பத்தை சந்திக்க நேரிடும் என்று சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அதிபர் பயன்படுத்தி வருகிறார். இதுவரையில் 3,000 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் சுட்டதில் 50 பேர் பலியானார்கள். வரலாற்று புகழ்மிக்க ஹோம்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 21 பேர் இறந்தனர். இதற்கிடையில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இட்லிப் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ் மீது கிளர்ச்சியாளர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 வீரர்கள் இறந்ததாகவும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐனநாயக ஆட்சி கோரி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்து ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

ராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த சூழ்நிலையில், லண்டனில் இருந்து வெளிவரும் Ôசண்டே டெலிகிராப்Õ என்ற பத்திரிகைக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பேட்டியளித்தார். அதில், “சிரியாவின் உள்விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் (ஐரோப்பிய நாடுகள்) தலையிடுகின்றன.

இந்த பிராந்தியத்தில் சிரியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிரியாவில் தலையிட ஐரோப்பிய நாடுகள் முயற்சி செய்தால், பூகம்பம் போன்ற கடும் விளைவுகளை அவை சந்திக்க நேரிடும். சிரியாவில் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் அது இந்த பிராந்தியத்தையே பற்றி எரிய வைக்கும். சிரியாவை துண்டாட அவை திட்டமிட்டால், இந்த பிராந்தியமும் பல்வேறு துண்டுகளாக சிதறும். மற்றொரு ஆப்கானிஸ்தானை அவர்கள் பார்க்க விரும்புகிறார்களா? அல்லது பல ஆப்கானிஸ்தான்களை பார்க்க நினைக்கிறார்களாÓ என்று ஆசாத் கடுமையக எச்சரித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அதிபர் பஷார் அல ஆசாத்க்கு ஆதரவு தெரிவித்து கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்ட ஆரம்ப கால கட்டங்களில் மக்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் பல தவறுகளை ராணுவம் செய்தது என்பதை ஒப்புக் கொண்ட ஆசாத், தற்போது தீவிரவாதிகள் மீது மட்டும் தான் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

பஷார் அல் ஆசாத் தனது ஆட்சியில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். நாடு முழுவதும் அரசுக்கு எதிராக அரசியல் கிளர்ச்சி பரவி வருகிறது. கடந்த 2000&ம் ஆண்டில் அதிபர் பதவியை ஏற்றபோது, அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. அரசியல் சீர்திருத்தங்களைவிட பெருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆசாத் முன்னுரிமை தந்தார். பஷார் அல் ஆசாத் அவரது தந்தை ஹபிஸ் அல் ஆசாத் கடந்த 2000ம் ஆண்டில் இறந்ததும் அதிபர் பதவியை ஏற்றார். இறப்பது வரையில் சிரிய அதிபராக ஹபிஸ் அல் ஆசாத் 30 ஆண்டுகள் பதவி வகித்தார்.

No comments:

Post a Comment