Thursday, October 06, 2011பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக ஊடகவியலாளர் ஒருவர், தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபல சிங்கள பத்திரிகைகளில் ஒன்றான ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த ரஹூனகே என்பவரினால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 3ம் திகதி கொம்பனித் தெருவில் இந்தப் பிரச்சார நடவடிக்கை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிலிந்த மொரகொடவின் வெற்றியை உறுதி செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் மக்களிடம் N;காரியதாகவும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் கட்சிகளுக்கு ஆதரவளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த ருஹூனகே இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகரசபை தேர்தலில் பாதுகாப்புச் செயலாளர் பிரச்சாரம் செய்தமை நிறுவன ஒழுக்கக் கோவைக்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தொலைக்காட்சி சேவையில் இந்தப் பிரச்சாரக் கூட்ட உரை ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பிரஜை என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு தாம் தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளதாக லசந்த தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment