Monday, October 31, 2011

பிலிப்பைன்ஸில் 700வது கோடி குழந்தை பிறப்பு!.

Monday, October 31, 2011
உலகின் 700வது கோடி குழந்தை இன்று உத்திர பிரதேச தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது. மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் திரண்டனர்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினர். மேலும் உத்திர பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் சமமாக பெறுகின்றன.

மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனினும், கடந்த 1805ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால், அடுத்த 122 ஆண்டில் (1927) 200 கோடியை எட்டியது. அதன்பிறகு 32 ஆண்டில் (1959) 300 கோடியையும்,14 ஆண்டில் (1974) 400 கோடியையும், 13 ஆண்டில் (1987) 500 கோடியையும், 12 ஆண்டில் (1999) 600 கோடியையும் எட்டியது. கடந்த 100 ஆண்டில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. தினமும் சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

700 கோடியாவது குழந்தை எங்கு பிறக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. எனினும், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது விளங்குகிறது. அதாவது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமம் ஆகும்.

மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது. அந்த வகையில் 800 கோடியை தொட 14 ஆண்டுகள் (2025) ஆகும். 900 கோடியை தொட 25 ஆண்டுகளும் (2050) 1000 கோடியை தொட 50 ஆண்டுகளும் (2100) ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment