Wednesday, September 28, 2011கொழும்பு:இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நாடு திரும்பியுள்ள நிலையில் புலிக் குட்டிகளான கூட்டமைப்புடன் நடத்தி வரும் பேச்சுக்களை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படவேண்டும் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு நாட்டைக் கூறுபோடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாகவும், இவர்கள்தான் புலிகளின் ஏகப் பிரதிநிதிகள் என்பதைப் இந்த அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் அனுசரணையுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி புலிகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிக்குட்டிகளுடன் அரசு பேச்சுகளை தொடரக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு நிலைப்பாடு என்றும், தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும். ஆரம்பம் முதலே நாம் இதனையே வலியுறுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எவ்வாறு வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பாக முதலில் சிங்கள மக்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும் எனவும், அதன் பின்னரே, ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கூறினார்.
தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று தாம் கூற வரவில்லை எனவும், நாட்டை கூறுபோட முனையாத, அதேபோன்று தேசப்பற்றுடனும் இதயசுத்தியுடனும் செயற்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்குமாறே வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment