Thursday, September 29, 2011

தமிழக உளவுத் துறை ஏடிஜிபி ராஜேந்திரன் அதிரடி மாற்றம்!.

Thursday,September, 29, 2011
சென்னை: தமிழக உளவுத் துறை ஏடிஜிபி பொறுப்பில் இருந்த ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பரமக்குடி துப்பாக்கிசூடு, அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் போன்றவையே இந்த மாற்றத்துக்கு பின்னணியாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உளவுத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டவர் ராஜேந்திரன். இவர் நேற்று திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து மாற்றப்பட்டு உளவுத் துறை டிஐஜி (1) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியிலும் சென்னை கமிஷனர் பதவி உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ராஜேந்திரன். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில நாளிலேயே உளவுத் துறை ஏடிஜிபியாக்கப்பட்டார். செல்வாக்கு மிக்க அதிகாரியாக செயல்பட்ட ராஜேந்திரன், டிஜிபி முதல் கீழ்மட்ட அதிகாரிகளை நியமிப்பது வரை எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார். அவரை திடீரென்று மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிரடி மாற்றம் பற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டதில் அதிமுக அரசுக்கு பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட்டன. பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் போன்றவற்றில் அரசு எடுத்த முடிவுகள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. பரமக்குடி சம்பவம் பற்றி சட்டசபையில் முதல்வர் தெரிவித்த கருத்துகள் கூட்டணி கட்சிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. அரசுக்கு எதிராக கூட்டணி கட்சிகளே வெளிநடப்பு செய்யும் நிலை ஏற்பட்டது.

அதற்குபிறகு அடுத்தடுத்து உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கைகள், கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி விட்டது.
Ôதேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம்Õ என்று ஆளும் கட்சிக்கு உளவுத் துறையில் இருந்து பரிந்துரை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக. தென் மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்த தலித்துகள், பரமக்குடி சம்பவத்துக்கு பிறகு மனம் மாறியுள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத், துப்பாக்கிசூடு தொடர்பாக விசாரணை நடத்த சென்ற போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமாதிரியான தகவல்கள் உளவுத்துறை மூலம் எடுத்துச் சொல்லப்படவில்லை. இவையே ஏடிஜிபி ராஜேந்திரன் மாற்றத்துக்கு முக்கிய காரணங்கள். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment