Sunday, September 4, 2011

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை கடவுளோடு சித்தரித்து போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை!

Sunday, September 04, 2011
சென்னை: கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டரோ, செய்திகளோ வெளியிடும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் மக்கள் இயக்கம் சார்பாக, நற்பணி விழாவும் ‘வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலர், என்னை கடவுளாகச் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதைக் கண்ட அடுத்த கணமே அவர்களை அழைத்து, ‘இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, அகற்றுங்கள்’ என்று கண்டிப்புடன் கூறினேன். அவர்கள் அகற்றிவிட்டனர்.

முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க, சிலர் முயல்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம் போன்ற பேதங்களை உருவாக்கி பிரிக்கவோ, பிளவுப்படுத்தவோ யாராலும் முடியாது. நான், மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்பவன். ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களெல்லாம் என்ன ஜாதி, மதம் என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம்தான்.

மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி ஆர்வ மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment