Friday, September 16, 2011

சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்; ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்!

Friday, September 16, 2011
ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார்.

சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியது. ஆனால் அதை வாங்க காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. அப்படியானால் சுவிஸ் வங்கிகளில் உள்ள பெரும் பாலான கறுப்பு பணத்தை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு வைத்துள்ளார்களா! அந்த கறுப்பு பணத்தை எடுத்து வந்து ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.

இதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் ஒழிந்தால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை அரசு உயர்த்த வேண்டியதில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் ஊழலை ஒழிக்க மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment