Wednesday, September 14, 2011அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது.
அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது.
இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
வேலூர் ரயிலின் என்ஜினும் நசுங்கிவிட்டதில் அதிலிருந்த இரு டிரைவர்கள், காட்பாடி ரயிலின் கார்ட் உள்பட 15 பேர் பலியாகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவிழ்ந்து கிடக்கும் 3 பெட்டிகளிலும் பல பயணிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க சென்னையிலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் ரயில்வே மீட்புப் படையினர் விரைந்தனர்.
மெட்டல் கட்டர்களை வைத்து பெட்டிகளை வெட்டி பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தால் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல
ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
சம்பவம் குறித்து அறிய ரயில்வே உதவி எண்-044 25347771
No comments:
Post a Comment