Wednesday, August 31, 2011

புலிகளுக்கு எதிரான தடை தொடரும்:அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

Wednesday,August,31,2011
புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்ட நீக்கத்துடன் புலிகள் மீதான தடை, உயர்பாதுகாப்பு வலயங்கள் போன்றனவும் வலுவிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கும், உயர்பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கியுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாமல் ஒழிப்பதற்கோ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட மூலமொன்று அறிமுகப்படுத்தப்படும் வரையில் தற்காலிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சரத்துக்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment