Friday, August 26, 2011

கொழும்பு முஸ்லிம்கள் UNP க்கே ஆதரவு என்பது ஒரு மாயை:மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா உடனான விசேட பேட்டி!

Friday, August 26, 2011
கொழும்பு முஸ்லிம்கள் UNP க்கே ஆதரவு என்பது ஒரு மாயை:மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா உடனான விசேட பேட்டி!

கேள்வி: கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்காக வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியை எந்தக் கோணத்தில் பார்க்கிaர்கள்?

பதில்: நாம் இதற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் பெரு வெற்றிபெற்றோம். இரண்டாம் முறையாக இடம்பெற்ற தேர்தலிலும் அதிகப்படியான வாக்கு வீதத்தைப் பெற்றோம். இதில், ஐ.தே.க.வின் வாக்குவீதம் 22 ஆகக் குறைவடைந்தது. இது மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட ஐ.தே.க.வின் வாக்கு வீதம் மிகவும் சரிவடைந்த நிலையிலேயே காணப்பட்டது. எனவே, இப்படியான தோல்வியிலேயே சென்று கொண்டிருக்கும் கட்சியொன்றுக்கு நகர் வாழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.

ஜனாதிபதி இந்நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்து வருகிறார். அவர், முப்பது வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது மாத்திரமல்ல, நாட்டுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக சிறந்த தீர்மானங்களையும் எடுத்தவர். இவை அனைத்தையும் இன்று மக்கள் புரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தலைக்கு மேல் வைத்து பாராட்டி வருகிறார்கள். யுத்தத்திற்குப் பின்னர் இந்நாட்டுக்கு சர்வதேசங்களின் அழுத்தங்கள் நிறையவே வந்தன. எனினும், இவை அனைத்தையும் சரியான மார்க்கத்தின் பின்னணியில் வழி நடாத்திச் சென்றோம்.

ஆகவே, நாம் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறை நடைபெறும் மாநகர, நகர சபைத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாக அமோக வெற்றியீட்டும்.

கேள்வி: இலங்கை அரசியல் வரலாற்றில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட எல்லைப் பிரதேசங்கள் இதுவரை காலமும் ஐ.தே.க.வின் ஆட்சி அதிகாரங்களின் கீழேயே வந்துள்ளது. எதிர்வரும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் இந்நிலைமையில் மாற்றங்கள் ஏதும் நிகழும் என எதிர்பார்க்கின்aர்களா.

பதில்: இந்த நடைமுறை கடந்த காலங்களில் பொருந்தினாலும் கூட, இன்று நிலைமை வேறு. இன்றைய அரசியல் நிலைமைகளை ஒப்பிட்டு நோக்கும் போது, இன்று நிறையவே வித்தியாசங்கள் தென்படுகின்றன என்பதனைச் சுட்டிக்காட்டலாம். உதாரணமாக, ஐ.தே.க.வுக்கு இன்று அரசியல் செய்வதற்கு நேரமில்லை. தலைமைத்துவம் தொடர்பிலான பிரச்சினைகளில் அவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரணிலுக்கு எதிராக சஜித் செயற்படுகிறார். சஜித்துக்குப் போட்டியாக ரணில் இயங்குகிறார். மற்றொரு புறத்தில் கரு ஓடித்திரிகிறார். இவ்வாறாக போட்டா போட்டித் தன்மை உள்ள ஒரு கட்சிக்கு வாக்களிக்க மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர்.

கேள்வி: கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களில் பெரும் பாலானோர் மிக நீண்ட காலந் தொட்டு ஐ.தே.க. வுடனேயே இணைந்துள்ளனர். இம்முறை இவர்களின் வாக்களிப்பின் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில்: நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். முஸ்லிம்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காக, அவர்களுக்கு அக்கட்சியால் நடந்தது ஒன்றுமில்லை. நன்மை தரும் எந்த விடயங்களையும் அவர்கள் முஸ்லிம்களுக்குச் செய்ய முன்வரவுமில்லை. இந்நிலையில், முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஐ.தே.க.வே தஞ்சம் என, அக்கட்சியில் தொங்கிக் கொண்டிருக்காமல், இப்போதாவது இது பற்றிச் சிந்தித்து தெளிவுபெற வேண்டும்.

ஜனாதிபதி முஸ்லிம்களுடன் மிக நெருக்கமானவராக இருக்கின்றார். எப்பொழுதும் முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு சிறந்த தலைவராகத் திகழ்கின்றார். எனவேதான், முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு வலுப்பெற்றுள்ளன.

பலஸ்தீனில் போராட்டம் ஏற்பட்ட சமயத்தில் ஜனாதிபதி ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, அவர்களின் பிரச்சினையில் தலையிட்டு பாரியளவிலான பங்களிப்புகளை யும் ஒத்துழைப்புக்களையும் நல்கினார்.

இது மாத்திரமல்ல, அரேபிய உலகில் “மஹிந்த ராஜபக்ஷ” என்ற நாமத்துக்கு மிகப் பெரும் கெளரவமும் மதிப்பும் மரியாதையும், அத்துடன் வரவேற்பும் உள்ளதைக் காண்கின்றோம். இவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் அவதானிக்கும் போது, தற்போதைய அரசியல் உலகில் கூட, முஸ்லிம்களுக்கு மிகவும் சமீபமான, நெருக்கமான அரசியல் தலைவராக ஒருவர் திகழ்கிறார் என்றால் அது வேறுயாருமல்ல மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத்தான் நிச்சயமாக இருக்க முடியும்.

கேள்வி: முஸ்லிம் மக்களின் உள்ளங்க ளைக் கொள்ளை கொள்வதற்கு அரசாங்கத் திடம் உள்ள வேலைத்திட்டம் என்ன என்பது பற்றி சற்று விபரித்தீர்களானால்...?

பதில்: எங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று அவசியமில்லை. சாதி, சமய வேறுபாடின்றி, மொழி நிற வேறுபாடின்றி, முழு நாட்டையும் வெற்றி கொள்ளும் வேலைத்திட்டமொன்று இருந்தால் அதுவே எமக்குப் போதுமானதாகும். இன்று மக்கள் மத்தியில் மரண பீதி எதுவும் இல்லை. மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வீட்டிலும், பயணத்தின் போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கொழும்பு நகருக்குள்ளும் எதுவித பயமுமின்றி வந்து போகிறார்கள்.

இவை அத்தனைக்கும் ஜனாதிபதிக்கே நாம் நன்றி செலுத்த வேண்டும். ஜனாதிபதி பயங்கரவாதத்தை முற்று முழுதாக நீக்கியிருக்கிறார். உண்மையில் அவர் ஒரு செயல் வீரர் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. யார் எதைச் சொன்னாலும், எதனை விமர்சித்தாலும் ஜனாதிபதி இந்நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அதிக பற்றுதலும் பாசமும் வைத்திருக்கிறார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த சமயத்தில், முஸ்லிம்களுக்கு அவர்களின் மத அனுஷ்டானங்களைக் கூட சரிவர, முறையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால், இன்று அழகாக எந்தவித தங்கு தடைகளுமின்றி முஸ்லிம்கள் அவர்களின் சகல சமய வழிபாடுகளையும் மேற்கொள்கின்றார்கள். உண்மையில், இதுவே முஸ்லிம்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளப் போதுமானதாகும். அத்துடன், அனைவரையும் வெற்றி கொள்ளவும் இச்சிறிய உதாரணம் போது மானதாகும்.

கேள்வி: காலம் கடந்தாலும் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான, முறையான தீர்வை வழங்காமல் ஏனோ தானோ என இருப்பதாக சில மக்கள் விமர்சித்து வரும் நிலையில் இது பற்றி நீங்கள் கூற விழைவதென்ன?

பதில்: வேலைத்திட்டமொன்று இல்லை என்று விமர்சனங்களை தெரிவித்து வரும் ஒரு சாராருக்கு, தற்போதுள்ள வேலைத் திட்டம் என்ன என்பது ஒரு கேள்விக்குறி. முழு நாட்டையும் பீடித்திருந்த பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கத்திற்கு ஏனைய பிரச்சினைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வைப் பெற்றுக் கொடுப்பது ஒரு கஷ்டமான காரியமல்ல. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்றால், இப்பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்தினால் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். மக்களின் சகல பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு சிறந்த திட்டம் உள்ளது என்று கூட திட்டவட்டமாக கூறலாம்.

அரசாங்கம் தொடர்பில் தேவையில்லாத அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருப்போர், நாட்டில் இன்று என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். கொழும்பு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மும்முரமாக, தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment