Wednesday, August 31, 2011

3 பேர் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்: தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்-மந்திரி விமர்சனம்; அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றலாமா?

Wednesday,August,31,2011
தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்- மந்திரி விமர்சனம் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் நாங்கள் (மத்திய அரசு) குறுக்கிட முடியாது, ஜனாதிபதியின் முடிவை மட்டும்தான் கவனத்தில் கொள்ள முடியும்,

ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். அந்தக்கருத்து உறுதிப்படுத்தப்படும் வரை அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்கும் என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் கூறும் போது, ராஜீவ் கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கூறுகையில், அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார். இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

இதற்கிடையே காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணைய தளத்தில் ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது போல் காஷ்மீர் சட்டசபையில் நாங்களும் அப்சல் குருவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றலாமா? இதை கட்சிகள் ஆதரிக்குமா? என்று கேள்வி விடுத்துள்ளார். அப்சல் குரு டெல்லி பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர். அவரது கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் அப்துல்லாவின் விமர்சனத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. அப்சல் குருவை உமர் அப்துல்லா ஆதரிக்கிறாரா? என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment