கோத்தாபய ராஜபக்ச மீதான கொலை முயற்சியில் தொடர்புடைய புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன!
Sunday, July 17, 2011இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீதான கொலை முயற்சியில் தொடர்புடைய புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன.
கெயார் இலங்கை என்ற உதவி நிறுவனத்தில் பணியாற்றியுள்ள இந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் உள்ள அந்த
நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாறியவர் என்றும் இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இவர்கள் கெயர் இலங்கை நிறுவனத்தின் வாகனத்தில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று கொழும்பில் புலிகளின் தாக்குதல் அணியிடம் ஒப்படைத்தாகவும் கூறப்படுகிறது.
கெயர் நிறுவன வாகனத்தின் எரிபொருள் தாங்கியில் இரகசிய மறைவிடம் ஒன்றினுள் வைத்து வெடிபொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த வெடிபொருட்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் பொருத்தப்பட்டு 2006 டிசம்பர் 1ம் நாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பயணம் செய்த கார் மீது பித்தளைச் சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேவேளை இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவை உசார்படுத்தியுள்ளதாகவும் இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
போரின் இறுதியில் தப்பிய பல நூற்றுக்கணக்கான புலிகள் ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
கோத்தாபய ராஜபக்சவைக் கொலைசெய்யும் திட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர் ஒருவரும் சிறிலங்காவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என்றும் இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் இந்தியாவில் அடைக்கலம் தேடிய இவர்களில் பலரும் பின்னர் கனடாவைச் சென்றடைந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment