Friday, July 22, 2011

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல்: தங்கு தளமாகும் தீவுகள் : புலனாய்வு துறை விசாரணை!

Friday, July 22, 2011
ராமநாதபுரம் : இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது. மன்னார் வளைகுடா தீவுகளை, கடத்தல்காரர்கள் தங்கு தளமாக பயன்படுத்துகின்றனரா என புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின், புலி அமைப்பினர் இல்லாததால் கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டது என பாதுகாப்புப் பிரிவினர் அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தற்போது, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது.

இதற்காக புதிய ஏஜன்ட்டுகள் உருவாகி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி கிராமங்களில் தங்கியுள்ளனர். கடத்தல் பொருட்களை படகு மூலம் தீவுகளில் சேமித்து, இலங்கையிலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம், வாலிநோக்கம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த, 36 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். அதே தினம், ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் இலங்கையிலிருந்து மர்ம படகு வந்து ஒருவரை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. கஞ்சா கைப்பற்றியுள்ள நிலையில், மர்ம படகு வந்து திரும்பியுள்ளதால், தீவு வழியாக கடத்தல் பொருள் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தில் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment