Saturday, July 23, 2011

அமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது-கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, July 23, 2011
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நெறிமுறைப் பற்றி பாரியளவில் பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்காவே ஜனநாயக விரோதமாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தடை செய்யப்படக் கூடும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வழியில் இலங்கைக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்தால், போதிக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளை தாமே மீறியதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து உள்நாட்டு அமைப்புக்களில் மிகவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் இனியும் பேச்சு;வார்த்தை அல்லது விவாதம் நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் துணை இராணுவக்குழுக்கள் இயங்கி வருவதாக சுமத்தப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகள் ஆயுத போராட்டம் நடைபெற்ற பிரதேசத்தில் குறுகிய காலத்திற்குள் ஆயுத வன்முறைகளை இல்லாதொழிப்பது முடியாத காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே வடக்கில் இவ்வாறான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment